கோவை பெண் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கில் வழக்குரைஞர், அவரது மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
ராஜவேலு - மோகனா - அம்மாசை
ராஜவேலு - மோகனா - அம்மாசை


கோவை: கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் கொலை வழக்கில் வழக்குரைஞர், அவரது மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ராஜவேலு (52),  மனைவி மோகனா. இவர்களுக்கு 3 குழந்தைகள். ஒடிஸாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி வரை மோசடி செய்ததாக போலீஸார் மோகனாவைத் தேடிவந்தனர்.  இதனால் அவர் கோவையில் தலைமறைவானார். மனைவியைக் காப்பாற்ற முயன்ற பல திட்டங்களைத் தீட்டியும் பலன் தராததையடுத்து தன் மனைவி உயிரிழந்ததாக நாடகமாடி வழக்கை முடிக்க ராஜவேலு முடிவு செய்தார். 

வழக்கு தொடர்பாக ஆலோசனைக்கு வந்த கோவை, சிவானந்தா காலனி மாரிமுத்து மனைவி அம்மாசை (45) என்பவரை கோவை, கோபாலபுரத்தில் உள்ள அலுவலகத்துக்கு வருமாறு ராஜவேலு கூறினார். அங்கு சென்ற அம்மாசையைத் தனது ஓட்டுநர் பழனிசாமியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து ராஜவேலு கொலை செய்தார்.

பின்னர் அவரது உடலை தனது மனைவி மோகனா எனக் கூறி அருகில் இருந்த மின்மயானத்தில் எரித்தார். தனது மனைவியின் பெயரில் இறப்புச் சான்றிதழ் பெற்று அந்த சான்றிதழை ஒடிஸா மாநில போலீஸாரிடம் ஒப்படைத்து மோசடி வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தார். இச்சம்பவம் 2011 டிசம்பர் மாதம் நடைபெற்றது. ராஜவேலு குறிச்சி பகுதியில் இருந்து இடம்மாறி கோவை மாநகர் பகுதிக்குள் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி மோகனா பெயரில் சொத்து ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் இறக்கவில்லை. தவறாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி உயிரோடிருப்பதாக சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீஸார் ராஜவேலுவின் ஓட்டுநர் பழனிசாமியிடம் விசாரித்தபோது மோசடி வழக்கில் இருந்து மனைவியைக் காப்பாற்ற அம்மாசையைக் கொலை செய்து எரித்த தகவலை போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் ராஜவேலு, மோகனா, உதவியாளர் பொன்ராஜ், ஓட்டுநர் பழனிசாமி ஆகியோரைக் கைது செய்தனர். அதில் பொன்ராஜ் அப்ரூவராக மாறினார். இதையடுத்து அவரை போலீஸார் வழக்கில் இருந்து விடுவித்தனர்.

கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ராஜவேலு,  மனைவி மோகனா, ஓட்டுநர் பழனிசாமி ஆகியோருக்கு கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ராஜவேலுக்கு ரூ.80 ஆயிரம், மோகனாவுக்கு ரூ.55 ஆயிரம், பழனிசாமிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவியல் சதிக்காக மூவருக்கும் ஆயுள் தண்டனையும் மீதமுள்ள மோசடி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி டி.ஹெச்.முகமது ஃபாரூக் தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த அம்மாசையின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com