விருதுநகர் மாவட்டம் சிவகாசி காவல் கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் டி பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் காவலர்கள் கரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த ஊர்வலம் நான்கு ரத வீதிகளின் வழியே சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்து நிறைவு பெற்றது. இதில் காவல் ஆய்வாளர்கள் வெங்கடாஜலபதி ராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி, சார்பு ஆய்வாளர்கள் 12 பேர், காவலர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.