விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

கோவை பி.எஸ்.என்.எல். அலுவலத்திற்குள் நுழைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 38 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

கோவை : கோவை பி.எஸ்.என்.எல். அலுவலத்திற்குள் நுழைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 38 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் காவலர்களை மீறி பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், சிங்காநல்லூர் நகர செயலாளர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர். 

அப்போது அவர்கள் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தினர். இதற்கிடையே  போராட்டக்காரர்கள் திடீரென பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது, அங்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.  இதனால், அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
தொடர்ந்து, காவலர்களின் தடையை மீறி பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குள்  புகுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அலுவலக இருக்கையில் அமர்ந்தும், தரையில் படுத்து புரண்டும் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 38 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றிச் சென்று அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com