வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, வடிந்ததால் மீனவ மக்களிடையே வியாழக்கிழமை பரபரப்பு நிலவியது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை ஏற்பட்டது.
புயல் இலங்கை வழியாக நகர்ந்து சென்ற போதிலும் இலங்கைக்கு அருகேயுள்ள வேதாரண்யம் பகுதியில் அதன் தாக்கம் இருந்தது.
இந்த நிலையில், கோடியக்கரையில் வியாழக்கிழமை காலையில் கடல் நீர்மட்டம் திடீரென உயர்ந்து தாழ்வான இடங்களில் உள்புகுந்து, சற்று நேரத்தில் வடிந்தது. இதனால் மக்களிடையே பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகை ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்து, அச்சமடைய தேவையில்லை என மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.