புரெவி புயல் பாதையில் நீலகிரி இல்லாததால் மழை பெய்தாலும் அதன் தாக்கம் அதிகம் இருக்காது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஏற்கனவே நிவர் புயலுக்காக ஏற்பாடு செய்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல் அளித்துள்ளார்.
குன்னூர் உபதலை ஊராட்சியில் உலக மாற்றுத் திறனாளிகள் நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைப்பெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கரோனா தோய்த் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 10 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் , 15 பயனாளிகளுக்கு 1,27,681 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிண்டர் டிரஸ்ட் சார்பில் தையல் பயிற்சி பெற்ற 15 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் நீலகிரி மாவட்டம் புயல் தாக்க பாதையில் இல்லை. இருப்பினும் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த நிவர் புயலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அதிக மழை பலத்த காற்று இருந்தால் இரண்டு நாள்களுக்கு பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.