பூண்டி ஒன்றிய பகுதி கிராமங்களில் வசித்து வரும் 318 பழங்குடியினர் குடும்பங்களுக்கு நிவர் புயல் நிவாரணப் பொருள்கள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் அருகே பூண்டி ஒன்றிய பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் வெளியில் செல்ல முடியாத நிலையில் உணவுக்கு அவதிப்படவும் நேர்ந்தது. இதுபோன்ற குடும்பங்களைக் கண்டறிந்து திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சில்ரன் பிலீவ் நிறுவன உதவியுடன் நிவர் புயல் நிவாரணமாக அரிசி உணவுப் பொருள்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் பூண்டி ஒன்றியத்தில் வாழ்வாதாரம் இழந்த சென்றான்பாளையம், பங்கரம்பேட்டை, அரும்பாக்கம், ஒதப்பை,கோவிந்தராஜகுப்பம், அவிச்சேரி, மாமண்டூர், டி.பி.புரம், கீரீன்வேல்நத்தம், வெங்கடாபுரம், வடதில்லை, மொன்னவேடு, பேரிட்டிவாக்கம், வேளகாபுரம், கூடியம் உள்ளிட்ட 318 இருளர் இனகுடும்பங்களுக்குஅரிசி,பருப்பு,சமையல் பொருள்கள் ஆகியவை அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இதில் அரும்பாக்கம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஐ.ஆர்.சி.டி.எஸ் திட்ட மேலாளர் ஸ்டீபன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி தலைவர்கள் ஜோதி(அரும்பாக்கம்), தில்லைகுமார் (பேரிட்டிவாக்கம்) ஆகியோர் பங்கேற்று பழங்குடியினர் குடும்பத்தினருக்கு 10 நாள்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் உணவு பொருள்களை வழங்கினர். இதேபோல், இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த 100 பேருக்கு வழங்கப்பட்டது.
அப்போது, புயல் மழை போன்ற பேரிடர் காலத்தின் போதும் ஏற்படும் மழை வெள்ளத்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர். அதேபோல், குழந்தைகள் ஏரி, ஆறு, குளம், குட்டை, ஆழம் தெரியாத நீர்நிலை பகுதிகளுக்குச் செல்லக் கூடாது, நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் செல்லக்கூடாது எனவும், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை மிகவும் கவனமுடன் பார்த்துக்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சில்ரன் பிலீவ் நிறுவனங்களைச் சேர்ந்தோர் செய்திருந்தனர்.