சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 3,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியின் பாதுகாப்புக் கருதி, ஏரியிலிருந்து உரி நீர் இன்று நண்பகல் 12 மணிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், செம்பரம்பாக்கம் ஏரி டிச. 3-ம் தேதி காலை 8 மணியளவில், 22 அடியை எட்டியது.
ஏரியின் மொத்த கொள்ளவு 3,158 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளதாலும், இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளியேற்றப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
உதவி எண்களையும் அறிவித்துள்ளது..
044 - 25384530, 044 - 25384540
தொலைபேசி எண் : 1913,
மண்டலம் 10 - 9445190210, மண்டலம் 11 - 9445190211, மண்டலம் 12 - 9445190212, மண்டலம் 13 - 9445190213
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.