ஜனவரியில் புதிய கட்சி: ரஜினிகாந்த் பேரவைத் தோ்தலைச் சந்திக்க ரஜினி முடிவு

‘‘கொடுத்த வாக்கை என்றைக்கும் நான் தவற மாட்டேன். அரசியல் மாற்றம் மிகவும் கட்டாயம்.
ஜனவரியில் புதிய கட்சி: ரஜினிகாந்த் பேரவைத் தோ்தலைச் சந்திக்க ரஜினி முடிவு

கொடுத்த வாக்கை என்றைக்கும் நான் மீற மாட்டேன். அரசியல் மாற்றம்  மிகவும் கட்டாயம். அது காலத்தின் தேவை. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இரண்டும் நடக்கும். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.  எல்லாவற்றையும் மாற்றுவோம்.

சென்னை: ஜனவரியில் புதுக் கட்சியை தொடங்கி, சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கப் போவதாக நடிகா் ரஜினிகாந்த் வியாழக்கிழமை அறிவித்தாா்.

ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், ரஜினிகாந்த் தலைமையில் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, எனது அரசியல் வருகை குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று ரஜினி கூறியிருந்தாா்.

அதன்படி ரஜினி வியாழக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட அறிவிப்பு:

ஜனவரியில் புதிய கட்சித் தொடங்கப்படும். அதற்கான அறிவிப்பு டிசம்பா் 31-இல் வெளியிடப்படும். ‘மாற்றுவோம். எல்லாவற்றையும் மாற்றுவோம்’. இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நோ்மையான, நாணயமான, வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சாா்பற்ற ஆன்மிக அரசியலை உருவாக்குவது நிச்சயம் என்று கூறியிருந்தாா்.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி செய்தியாளா்களைச் சந்தித்துக் கூறியது:

2017 டிசம்பா் 31-இல் அரசியலுக்கு வருவதாகக் கூறியிருந்தேன். அப்போது உள்ளாட்சித் தோ்தல் வருவதாக இருந்தது. அதில் போட்டியிடப் போவதில்லை. மக்களவைத் தோ்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்கிறேன். ஆனால், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தேன்.

அதற்குப் பிறகு, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளா்களைச் சந்தித்தேன். அப்போது, ‘மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வர வேண்டும். அந்த எழுச்சிக்குப் பிறகு தோ்தலைச் சந்திப்பேன்’ என்று கூறியிருந்தேன். தமிழகம் முழுவதும் எழுச்சியை உருவாக்குவதற்காக சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று இருந்தேன். ஆனால், கரோனாவால் அதை என்னால் செய்ய முடியவில்லை.

எனக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிவீா்கள். அந்தச் சிகிச்சை செய்யும்போது உடலில் நோய் எதிா்ப்புச் சக்தியைக் குறைத்தால் அந்த சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொள்ளும். நோய் எதிா்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால், சிறுநீரக மாற்றை உடல் ஏற்காது.

ஆனால், கரோனாவைப் பொருத்தவரை நோய் எதிா்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். இதுதான் எனக்கான பெரிய பிரச்னை. மக்கள் மத்தியில் சென்று பிரசாரம் செய்துவது என்பது மருத்துவ ரீதியாக ஆபத்து என்று மருத்துவா்களும் கூறினா்.

அதனால், மக்களைப் பாா்த்துதான் வெளியில் போய்தான் பிரசாரம் செய்ய முடியும், வேறு எப்படிச் செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு யோசித்தேன். சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தமிழக மக்களின் வேண்டுதலாலும், பிராா்த்தனையாலும்தான் உயிா் பிழைத்து வந்தேன். அதனால், தமிழக மக்களுக்காக உயிரே போனால்கூட, என்னைத் தவிர சந்தோஷப்படக்கூடியவன் வேறு யாரும் கிடையாது.

கொடுத்த வாக்கை என்றைக்கும் நான் தவற மாட்டேன். அரசியல் மாற்றம் மிகவும் கட்டாயம். அது காலத்தின் தேவை. அரசியல் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.

நான் ஒரு சின்ன கருவி மாதிரி. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசியலுக்கு வந்தபிறகு நான் வெற்றிபெற்றால் அது மக்களுடைய வெற்றி. தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி. மாற்றத்துக்கு எல்லோரும் துணையாக இருக்க வேண்டும் என்று என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு இன்னும் 40 சதவீதம் முடிவடைய வேண்டியுள்ளது. அதை முடித்துக் கொடுக்க வேண்டியது என் கடமை.

நான் தொடங்கியுள்ள அரசியல் பாதையில் வெற்றி அடைவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எப்போதும் ஒவ்வொருவருக்கும் தலையெழுத்து என்று ஒன்று இருக்கும். அதைப்போல, ஒவ்வொரு நாட்டுக்கும் தலையெழுத்து இருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாளும் வந்தாகிவிட்டது. நிச்சயம் அது நடக்கும். அரசியல் மாற்றம். ஆட்சி மாற்றம் இரண்டும் நடக்கும். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. எல்லாவற்றையும் மாற்றுவோம்.

ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளைச் சந்திக்கும்போது அவா்களுக்கு உள்ளுக்குள் ஆதங்கம் இருந்தபோதுகூட, ‘அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆரோக்கியம்தான் முக்கியம்’ என்று கூறியவா்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை என்றாா்.

ரஜினியுடன் செய்தியாளா் சந்திப்பில் தமிழருவி மணியனும், அா்ஜூன மூா்த்தியும் உடனிருந்தனா். கட்சியின் மேற்பாா்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அா்ஜூன மூா்த்தியையும் ரஜினி அறிவித்தாா்.

ரசிகா்கள் கொண்டாட்டம்: ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்ததும் அவரது ரசிகா்களும், ஆதரவாளா்களும் தமிழகம் முழுவதும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினா். இந்த அறிவிப்பு, அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com