3-வது நாளாக இடைவிடாத கொட்டித் தீர்க்கும் கனமழை: சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது

சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் மூன்றாவது நாளாக இடைவிடாத கொட்டித் தீர்க்கும் கனமழையால் சம்பா பயிர்கள் நீர்ரில் மூழ்கியது.
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது


சீர்காழி: சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் மூன்றாவது நாளாக இடைவிடாத கொட்டித் தீர்க்கும் கனமழையால் சம்பா பயிர்கள் நீர்ரில் மூழ்கியது. பல பகுதிகளில் குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 34 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

தமிழகத்தை நெருங்கிய புரெவி புயல் பாம்பன் கன்னியாகுமரி இடையே வெள்ளிக்கிழமை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. 

சீர்காழி பகுதியில் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது.  வெள்ளிக்கிழமை காலை 8.30  மணி வரையிலான நிலவரப்படி, நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 34 மி.மீட்டரும், சீர்காழியில் 20 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

இந்த தொடர் மழையால் சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் ஆயிரகணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர் . 
சீர்காழி நகரில் தட்சிணாமூர்த்தி நகர் ,சின்னத்தம்பி நகர், கற்பகம் நகர், என்ஜிஓ நகர், பாப்பையா நகர், எஸ் கே ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.

அதேபோல் சட்டநாதபுரம் ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் தொட்டி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது ராதாநல்லூர் பகுதியில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரம் வேப்ப மரங்கள் விழுந்தன. மின் கம்பங்களும் அதிக அளவு விழுந்ததால் வியாழக்கிழமை பிற்பகல் முதல் ராதாநல்லூர், மங்கைமடம், திருவெண்காடு, மேலச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விட்டு விட்டு வந்து செல்கின்றது. சாலைகளில் தண்ணீர் குளம் போல் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சீர்காழி பழைய பேருந்து நிலையம் தேர் வடக்கு வீதி சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கடந்து செல்வதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 

பழையார் துறைமுகத்தில் பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் சென்று வடியாததால் தற்காஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

பழையார் துறைமுகம் மூலம் மீன் பிடிக்கச் செல்லும் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் நிவர் மற்றும் புரெவி புயலால்  10வது நாளாக  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தங்களது விசை மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com