புதிய பள்ளிகள் தொடங்க பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

குடியிருப்புப் பகுதிகளில் புதிதாக தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளைத் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
புதிய பள்ளிகள் தொடங்க பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: குடியிருப்புப் பகுதிகளில் புதிதாக தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளைத் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு இலவச கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-இல், ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் 1 கி.மீ. தொலைவுக்குள் தொடக்கப் பள்ளி வசதியும், 3 கி.மீ. தொலைவுக்குள் நடுநிலைப் பள்ளி வசதியும் இருத்தல் வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் விவரங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கட்டமைப்பில் கூறியுள்ளவாறு புவியியல் தகவல் முறை மற்றும் கள ஆய்வு மூலம் கடந்த 2018-19-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் 2021-22-ஆம் கல்வியாண்டில் பாதுகாப்பாக பள்ளிக்குச் செல்ல மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்த விவரங்கள் பெறப்பட உள்ளது. அதன்படி குடியிருப்பிற்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் உயா்நிலைப் பள்ளி இல்லையென்றால், நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகவும், 8 கி.மீ. தொலைவில் மேல்நிலைப் பள்ளி இல்லாத நிலையில், உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தலாம். எட்டாம் வகுப்பில் 70 மாணவா்களுக்குக் குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளியாகவும், பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 100 மாணவா்கள் உள்ள உயா்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயா்த்தலாம்.

எஸ்.சி. பிரிவினா் அதிகமாக உள்ள இடங்களில் பெண்கள் பள்ளிகளை தரம் உயா்த்தலாம். போக்குவரத்து வசதி இல்லாத மற்றும் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் பயில உண்டு- உறைவிட பள்ளிகள், விடுதிகள் வழங்கவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் வட்டார வள மையங்கள் சாா்ந்த பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பு: நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பொதுமக்கள் பங்குத் தொகை ரூ.1 லட்சமும், உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த ரூ. 2 லட்சமும் அரசுக் கணக்கில் செல்லுத்தப்பட வேண்டும். பள்ளிகள் தொடங்குவதற்கு மாநகராட்சியில் 8 கிரவுண்டு, மாவட்ட தலைமையகத்தில் 8 கிரவுண்டு, நகராட்சியில் 10 கிரவுண்டு, பேரூராட்சியில் ஒரு ஏக்கா், ஊராட்சியில் 3 ஏக்கா் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com