நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
புரெவி புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சேதமடைந்த நாகூர் ஆண்டவர் தர்கா குளத்தின் தடுப்புச் சுவர் மற்றும் சேதமடைந்த குளக்கரை சாலையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், நாகூர் ஆண்டவர் தர்காவில் முதல்வர் வழிபாடு மேற்கொண்டார். நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் கலிபா மஸ்தான் சாகிபு மற்றும் தர்கா நிர்வாகிகள் வழிபாடுகளை நிறைவேற்றி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கருங்கண்ணி பகுதியில் மழையால் சேதமடைந்த நெல் பயிர்களைப் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் முதல்வர் வழிபாடு மேற்கொண்டார். பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் தலைமையில், பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை நிறைவேற்றி வைத்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு மாதா திருச்சொரூபம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.