நாகை: வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார். பிரார்த்தனையில் பங்கேற்ற முதல்வருக்கு தேவாயலம் சார்பில் வேளாங்கண்ணி சொரூபம் வழங்கப்பட்டது.
புரெவி புயல் காரணமாக, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த வெள்ள பாதிப்புகளை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை கடலூர் ஆய்வை முடித்துத்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு வேளாங்கண்ணி சென்று தங்கினார்.
இந்நிலையில், புதன்கிழமை காலை தனது ஆய்வைத் தொடங்கும் முதல்வர் பழனிசாமி, வேளாங்கண்ணி தேவாலயத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றார். பிரார்த்தனையில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமிக்கு மாதா ஆலய பாதிரியார் ஆசி வழங்கினரா. முதல்வருக்கு பேராலயம் சார்பில் மாதா சொரூபம் வழங்கப்பட்டது.
கனமழையால் சேதமடைந்த நாகூர் ஆண்டவர் தர்கா சுற்றுச்சுவரை காலை 7 மணி அளவில் பார்வையிடுகிறார். பின்னர், கருங்கண்ணி பகுதியில் விளைநிலங்களில் ஏற்பட்டு சேதங்களைப் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிகிறார்.
தொடர்ந்து, பழங்கள்ளிமேடு , அருந்தவம்புலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
புதன்கிழமை பிற்பகல் மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள நல்லாடை, மொழையூர் ஆகிய பகுதிகளில் பயிர் சேதங்களையும், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள வெள்ள நிவாரண முகாமையும் முதல்வர் பார்வையிட உள்ளார்.