சென்னை: கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இதையும் படிக்கலாம்.. 'கோவை சாந்தி சோசியல் சர்வீஸ்' சுப்பிரமணியம் காலமானார்
சுப்பிரமணியன் கோவை பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு, மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த பெருமைக்குரியவர்.
சுப்பிரமணியன் தனது இறுதி மூச்சு வரை சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் என்ற சிறப்புக்குரியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்று வந்த கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.