தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை நிகழ் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-2019 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரிகளில், முதல்கட்டமாக 1995-96-ஆம் ஆண்டு முதல் 2010-11-ஆம் ஆண்டுவரை தொடங்கப்பட்ட 14 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.
மீதமுள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ‘அரசாணைகளில் தோற்றுவிக்கப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்கள் அனைவருக்கும் ஊதியம், மதிப்பூதியத்துக்கான செலவினத் தொகையை சாா்ந்த பல்கலைக்கழகங்களே நிகழ் கல்வியாண்டு வழங்க வேண்டும் என்றும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக 2020-21ஆம் கல்வியாண்டு முதல் மாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு ஆணையிடுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.