காட்டு யானை தாக்கி இறந்த இருவருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி: ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: காட்டு யானை தாக்கி இறந்த இருவருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
காட்டு யானை தாக்கி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திரு. ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் கொடூர மரணம் அடைந்திருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது மரணத்திற்குக் காரணமான ஆட்சியாளர்களின் மெத்தனத்தைக் கண்டித்து இன்று நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இருவரது திடீர் மரணத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனந்தராஜ் கழகப் பணியிலும் பொதுப் பணியிலும் தீவிரமாகப் பணியாற்றி மக்களின் அன்பையும் கழகத்தினரின் அன்பையும் பெற்றவர். அ.தி.மு.க. அரசின் அலட்சியத்துக்குக் கழகத்தைச் சேர்ந்த இருவர் பலியாகி இருப்பது மட்டுமின்றி இதுவரை கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் 10 பேர் காட்டு யானை தாக்குதலுக்குப் பலியாகி இருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
காட்டு யானைகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து என்பது அ.தி.மு.க. அரசுக்கு நன்கு தெரிந்தும் மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அனைவரது குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் - இதுபோன்ற தாக்குதல்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.