எடப்பாடி: அமமுகவிற்கு மீண்டும் குக்கர் சின்னம் கிடைத்தை அடுத்து, எடப்பாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையத்தால் மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே தாங்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற குக்கர் சின்னமே மீண்டும் கிடைத்துள்ளதை அமமுகவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக சேலம் மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் பூக்கடை சேகர் தலைமையிலான அமமுகவினர் செவ்வாய் அன்று காலை எடப்பாடி பேருந்து நிலையத்தில் திரண்டனர்.
அவர்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த எடப்பாடி காவல்துறையினர், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அமமுகவினரை தடுத்து நிறுத்தி, உரிய அனுமதி இன்றி கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர்.
இதனை அடுத்து அமமுக மேற்கு மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி, எடப்பாடி காவல் ஆய்வாளர் செந்திலை சந்தித்து, தங்களுக்கு கொண்டாடத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் அங்கு திரண்டிருந்த அமமுகவினரை, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காவல்துறையின் இந்த நடவடிக்கையால் எடப்பாடி பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.