சென்னை: தஞ்சாவூா், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளபுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 170 மி.மீ கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 160 மி.மீ மழை பெய்துள்ளது.
வெள்ளி (டிச.18), சனி (டிச.19) ஆகிய 2 நாள்களில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
இயல்பை விட 8% அதிகம்: கடந்த அக்.1 முதல் டிச.17 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பான மழையின் அளவு 419 மிமீ. தற்போது 452 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 8 சதவீதம் அதிகம். இந்த காலகட்டத்தில் சென்னையின் இயல்பான மழையின் அளவு 734 மி.மீ. தற்போது 1,034 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 41 சதவீதம் அதிகம் என பாலச்சந்திரன் தெரிவித்தாா்.