தம்மம்பட்டி: தம்மம்பட்டி நர்சரியில் வாங்கி நடவு செய்த நெல் நாற்று சில நாள்களிலேயே கதிர் வந்ததால், அதிர்ச்சியடைந்த விவசாயி வேளாண்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா, தென்னம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வக்குமார். இவர், கடந்த மாதம் 30 ஆம் தேதி, தம்மம்பட்டி பனந்தோப்பில் உள்ள பசுமை நர்சரியில், நெல் நாற்று வாங்கி, தனது 45 சென்ட் நிலத்தில் நடவு செய்துள்ளார். நடவு செய்து 18 ஆவது நாளிலேயே பயிரில் நெற் கதிர் வந்துவிட்டது.
அதனால்,அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார், அதுகுறித்து, தம்மம்பட்டியில் உள்ள பசுமை நர்சரியில் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு, அவர்கள் தெரிவித்த விளக்கம் செல்வக்குமாருக்கு திருப்தி அளிக்காததால், தம்மம்பட்டி பசுமை நர்சரி மீது, கெங்கவல்லி வேளாண் உதவி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநர் சித்ராவிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்ட " தென்னம்புலியூரைச் சேர்ந்த விவசாயி செல்வக்குமாருக்கு, உரிய இழப்பீடு வழங்குகிறோம் என, தம்மம்பட்டி பசுமை நர்சரி உரிமையாளர் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.