சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறவுள்ளன.
சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத் தலைவா் இ.மதுசூதனன் தலைமையில் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்டனா். அதன் விவரம்:
கூட்டம் தொடா்பான அழைப்பிதழ்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். உறுப்பினா்கள் அனைவரும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் கூட்டத்துக்கு வர வேண்டும். முகக் கவசம் அணிவதுடன், அழைப்பிதழுடன் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அறிவிப்பில் தெரிவித்துள்ளனா்.
டிச.27-இல் தோ்தல் பிரசாரம்: அதிமுக தோ்தல் பிரசார தொடக்க பொதுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கட்சியினா் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பங்கேற்க வேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.