திருச்சி: திருச்சியில் கொய்யாபழம் பறிக்கச் சென்ற 5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து பலியானார்.
திருச்சி, தென்னூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பெயிண்டர் பிரேம்குமார்-நளினி தம்பதியரின் 5 வயது மகன் யஸ்வந்த் .
இந்நிலையில் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் யஸ்வந்த் திடீரென காணமால் போனார்.
இதனால் பதட்டமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடிய நிலையில் , வீட்டின் அருகில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் சிறுவன் யஸ்வந்த் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தில்லை நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாரேனும் கொலை செய்து கழிவு நீர் கால்வாயில் வீசி சென்றார்களா? என்ற பல்வேறு கோணங்களில், சம்பவம் குறித்து தாயார் நளினி அளித்த புகாரின் பெயரில் தில்லை நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அக்கம்பக்கத்து சிறுவர்கள் அளித்த தகவலின்படி, அந்த சாக்கடை கால்வாயின் அருகே உள்ள கொய்யா மரத்தில், கொய்யா பழம் பறிக்கச் சென்றதில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
என்றாலும், சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிகிறது.