திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த  உயர்நீதிமன்றம் அனுமதி
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த  உயர்நீதிமன்றம் அனுமதி

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: உயர்நீதிமன்றம் அனுமதி

கரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாள்கள் நடைபெறும் விழாவை நடத்த  உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.


சென்னை: கரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாள்கள் நடைபெறும் விழாவை நடத்த  உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன் தாக்கல் செய்த மனுவில், வரும் டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் டிச.27 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோவில் செயல் அலுவலரும் முடிவெடுத்தனர். 

கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோவிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும், நள தீர்த்ததில் நீராட அனுமதிப்பதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது. 

இதுதொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி  நான், புதுச்சேரி அரசு, காரைக்கால் ஆட்சியர், கோவில் செயல் அலுவலர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 27-ஆம் தேதி மனு கொடுத்தேன். மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே  அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், சனிப்பெயர்ச்சி தினமான டிச.27ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நளதீர்த்தம்,  பிரம்மதீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர்த்து மீதமுள்ள 48 நாள்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் கோவிலுக்கு வெளியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள வரிசை 3 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களை கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்து உள்ள நிலையில் கோவிலை மூட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை, மத உணர்வுடைய பக்தர்களின் வழிபடும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டுமென வலியிறுத்தப்பட்டுள்ளது. இந்த 48 நாள்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்துக்காக ஒரு நாள் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்? என கேள்வி எழுப்பினார். பின்னர் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை ஆளுநர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை டிச.24 நண்பகல் 12 மணிக்கு கூட்டி  முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com