கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்துவ மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஏசு பெருமானின் பிறந்தநாளைக் கொண்டாடும் கிறித்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஏசுபெருமான் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே கொண்டாடடப்பட வேண்டியவர் அல்ல அவர் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நல்வழி காட்டியவர்.
வெறுப்புக்கு பதிலாக அன்பையும் ஒடுக்குமுறைக்கு பதிலாக கருணையையும் உலக மாந்தருக்கு போதித்தவர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொடுங்கோலர்களாக இல்லாமல் மக்களை நேசிக்கக் கூடியவர்களாகவும் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர். அத்தகைய கொடுங்கோலர்களை எதிர்த்து போராட வேண்டும் என்கிற போர்குணத்தையும் தனது வாழ்க்கையின் மூலம் மக்களுக்கு உணர்த்தியவர். அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேர்ந்தாலும் அன்பையும் கருணையையும் கைவிட்டுவிடாமல் அநீதிக்கு எதிராக அறப்போரை தொடரவேண்டும் என்று தனது வாழ்வின் செய்தியாக மனித குலத்துக்கு வழங்கியவர்.
அத்தகைய ஏசுபெருமானின் வழியில் அநீதிக்கு எதிரான அறப்போரை தொடருவோம். அன்பையும் கருணையையும் அறத்திற்கான அடிப்படையாக போதித்த ஏசுபெருமானின் பிறந்தநாளில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.