பெண் பூசாரிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பெண் பூசாரிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
மதுரைக்கிளை நீதிமன்றம்
மதுரைக்கிளை நீதிமன்றம்


மதுரை: பெண் பூசாரிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள நல்லுதேவன்பட்டியைச் சேர்ந்த பூசாரி பின்னியக்காள் தாக்கல் மனுவில், "லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகிலுள்ள துர்க்கையம்மன் கோவிலில் எங்கள் குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களே, 10 தலைமுறையாக பூசாரியாக உள்ளோம். என் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது ஒரே வாரிசான நான் பூசாரி பணியை செய்து வந்தேன். 

என் தந்தை இறந்தபிறகு, நான் பெண் என்பதால் பாகுபாடு காட்டிய கிராமத்தைச் சேர்ந்த சிலர் நான், பூசாரியாக பணியாற்றக் கூடாது என தடுத்தனர். இதை எதிர்த்து நான் தொடர்ந்து வழக்கில் பூசாரியாக பணியாற்ற உயர்நீதிமன்ற அனுமதித்தது. இதை எதிர்த்த மனுவில் எனக்கான உத்தரவு உறுதிபடுத்தப்பட்டது. சிவில் நீதிமன்றமும் என்னை அனுமதித்தது. 

ஆனால், வருவாய்துறையினரும், போலீஸாரும் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையிலேயே நடக்கின்றனர். என்னை பூசாரி பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கடந்த 12 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. 

எனவே எனக்கு எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கி பூசாரியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு, மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com