கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள பாறை கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(23).ராணுவ வீரர். சௌகந்த்ராபாதில் பணியாற்றி வந்த அவர் விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(23). இவரும் ராணுவ வீரர். அண்மையில் பெங்களூரில் பயிற்சி முடித்த நிலையில் கிராமத்திற்கு வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி அணை நோக்கி, ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது சுந்தேகுப்பம் பிரிவு சாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதில், பிரசாந்த் நிகழ்விடத்திலும் கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
விபத்து சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.