வேலூர்: மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துபவர்களை கைது செய்வது அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட குகையநல்லூர், ஏரந்தாங்கல், செம்பராயநல்லூர், ஆரியமுத்துமோட்டூர், குப்பாத்தமோட்டூர் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் "அதிமுகவை நிராகராப்போம்" என்ற மக்கள் கிராம சபை கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. இவற்றில் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துபவர்களை கைது செய்வது அரசின் அதிகார துஷ்பிரியோகத்தை காட்டுகிறது. கிராம சபை என சொல்லக்கூடாது என சட்டம் எதுவும் கிடையாது. கிராம சபை நடத்தி திமுகவினர் மக்களிடம் பேசுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரி அரசை விமர்சித்த பிரதமர் தமிழகத்தை எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை. அதற்கு தமிழகத்தில் நடந்து வரும் பேரம் தான் காரணமாகும். அது இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகு கூறுவார்கள். யாதவர் சமுதாயத்தை இழிவாக பேசியதாக அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து ராமநாதபுரத்தில் போராட்டம் நடைபெறுகிறது. தவறாக பேசினால் தானே அவர் செல்லூர் ராஜூ என்றார் அவர்.