நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அங்கு ஏழைத் தொழிலாளி ஒருவரது வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.
லாரி மற்றும் கோழிப்பண்ணைத் தொழிலில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். சங்க நிர்வாகிகள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அவரிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் நகரப் பகுதியில் நடந்தே சென்று மக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிக்கலாமே.. உத்தரகோசமங்கை கோயிலில் நடராஜருக்கு சந்தனக் களைப்பு (விடியோ)
மேலும் பொது மக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து முதலைப்பட்டி அண்ணாநகர் அருந்ததியர் காலனிக்கு சென்ற முதல்வர் அங்கு ஏழைத் தொழிலாளி ஒருவரது வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார். பின்னர் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதிமுகவுக்கு வாக்குகளை சேகரித்துடன் அப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பொதுவான கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
முதல்வருடன் மின் துறை அமைச்சர் பி., தங்கமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி. சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), கே.பி.பி. பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.