சென்னை; பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிக்கலாமே.. இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி
அப்போது அவர் கூறியதாவது, பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த நபர் ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பு சிகிச்சை மையத்தில் தனியறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரிட்டனிலிருந்து வந்த 17 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவருக்கு உருமாறிய கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில்லாமல், பிரிட்டனிலிருந்து வந்து அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 16 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் 6 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று?
கரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி நடத்தப்பட்ட ஆய்வில், ஒருவருக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பில் மட்டும் மாறுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 30 பேரின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.