தமிழக அரசால் வழங்கப்படுகின்ற பொங்கல் பரிசுக்காக வழங்கப்படுகின்ற டோக்கனில் அமைச்சரின் படம் இருப்பதை கண்டித்து திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய், மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்களும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில், கோவையில் பொங்கல் பரிசு வழங்கும் டோக்கனில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் புகைப்படத்தை அச்சிட்டு அதிமுகவினர் வழங்குவதைக் கண்டித்து, கோவை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.இராமச்சந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுகவினரின் தலைமையில் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அதனைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் திமுகவினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே விட அனுமதிக்காமல் தடுத்தனர். ஆனாலும் அனைவரும் அத்துமீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே புகுந்து அதிமுக அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் காவல்துறையினருக்கும் திமுக காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சற்று நேரம் பரபரப்பான நிலையில் காணப்பட்டது.