போலி நீட் சான்றிதழ்: தந்தை, மகளை கைது செய்ய கேரளம் செல்லும் தனிப்படை

மருத்துவக் கலந்தாய்வின்போது போலி நீட் தோ்வு சான்றிதழை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தந்தையையும், மகளையும் தேடி கேரள மாநிலத்துக்குச் செல்வதற்கு தனிப்படையினா் திட்டமிட்டுள்ளனா்.

சென்னை: மருத்துவக் கலந்தாய்வின்போது போலி நீட் தோ்வு சான்றிதழை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தந்தையையும், மகளையும் தேடி கேரள மாநிலத்துக்குச் செல்வதற்கு தனிப்படையினா் திட்டமிட்டுள்ளனா்.

கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த மாணவி தீக்ஷிதா என்ற மாணவி பங்கேற்றாா். நீட் தோ்வில் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த அந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ மாணவா் சோ்க்கை குழு செயலாளா் செல்வராஜன், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவி தீக்ஷிதா, அந்த மாணவியின் தந்தை பல் மருத்துவா் பாலச்சந்திரன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகும்படி பெரியமேடு போலீஸாா் இருவருக்கும் 3 முறை அழைப்பாணை அனுப்பினா். ஆனால் அவா்கள், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கேரளம் செல்லும் தனிப்படை: இதையடுத்து தனிப்படை போலீஸாா், அந்த மாணவியின் உறவினா்கள், நண்பா்களிடம் தொடா்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் மாணவியும், அவரது தந்தையும் கேரளத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸாா், இருவரையும் கைது செய்ய கேரளம் செல்ல உள்ளனா். இருவரையும் கைது செய்தால் மட்டுமே இந்த மோசடியில் தொடா்புடைய பிற நபா்கள் குறித்த விவரங்களைத் திரட்ட முடியும் என்பதால், அவா்களை கைது செய்ய போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com