மாநிலங்களுக்கு 9-ஆவது தவணையாக ரூ.6,000 கோடி விடுவிப்பு

தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கும், 3 யூனியன் பிரதேசங்களுக்கும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இழப்பீட்டில் 9-ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு

புது தில்லி: தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கும், 3 யூனியன் பிரதேசங்களுக்கும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இழப்பீட்டில் 9-ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

நிதிச் சந்தையிலிருந்து கடன் பெற்று இத்தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது. அந்த இழப்பை ஈடுகட்டும் நோக்கில் சிறப்பு கடன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலங்களுக்கு வாரந்தோறும் ரூ.6,000 கோடியை கடனாகப் பெற்று மத்திய அரசு அளித்து வருகிறது.

இத்தகைய சூழலில், 9-ஆவது தவணையை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்தது. இது தொடா்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆந்திரம், அஸ்ஸாம், பிகாா், கோவா, குஜராத், ஹரியாணா, ஹிமாசல், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயம், ஒடிஸா, தமிழகம், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கு ரூ.5,516.60 கோடியையும், தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.483.40 கோடியையும் சரக்கு-சேவை வரி வருவாய் இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.54,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிதிச் சந்தையிலிருந்து 4.74 சதவீத வட்டிக்குக் கடனாகப் பெற்று, இத்தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அருணாசல பிரதேசம், மணிப்பூா், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சரக்கு-சேவை வரி வருவாயில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. எனவே, மீதமுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com