குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக 42 பேர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.
அதேவேளையில் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும்,அது தொடர்பான விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இதையடுத்து குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்வாணைய அதிகாரிகள், சிபிசிஐடியில் புகார் செய்தனர். மேலும் வழக்குக்கு தேவையான ஆவணங்களையும் அவர்கள், சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர்.
42 பேர் மீது வழக்கு: இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி குரூப் 2 ஏ தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள். இது தொடர்பாக அந்த மையத்தில் தேர்வு எழுதிய அனைவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும், இத் தேர்வில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.