குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் உண்மை வெளிவரும் வகையில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை அளித்திருப்பது நம்பக்கூடியதாக இல்லை. குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் உண்மை வெளிவரும் வகையில் முறையான விசாரணை நடத்துவது அவசியம்.
ஏற்கெனவே, நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும். தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாநகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் அறிவிப்பது சந்தேகம்தான் என்றார் தினகரன்.