குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் மக்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியும், தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதை நிறுத்த வலியுறுத்தியும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 மண்டலங்களாகப் பிரித்து பிப்.8-ம் தேதி வரை கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் சென்று மக்களிடம் கையெழுத்து வாங்க உள்ளோம்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்தத் சட்டம் நிறைவேறி இருக்காது. அவர்கள் மக்களுக்குத் துரோகம் செய்து விட்டனர். மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து இந்தச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து போராடி வருகிறோம். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.