வன்முறையை தூண்டும் வகையில் பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மௌனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா? இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா? இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார்.
மதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில்; இவரது பேச்சு இருப்பதால் உடனடியாக ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். இப்பேச்சு அரசமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். எனவே, முதலமைச்சர் இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் தலையிட்டு இவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏனெனில், இவரது பேச்சு அப்பட்டமான சட்டவிரோதமாக அமைந்திருப்பதால் அமைச்சரவையில் இவர் தொடர்ந்து நீடிப்பாரேயானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடுமென எச்சரிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.