தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார், எஸ்பி, டிஎஸ்பிகளுக்கு சொந்தமான இடங்களில் சனிக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து, 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார்.
அதில், வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குநர் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதில், மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது எனப் புகார் எழுந்தது. இதுகுறித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய காவல்துறையினருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது பொறுப்பிலிருந்த எஸ்பி, டிஎஸ்பி வீடுகளிலும், சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டிஎஸ்பி வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.