விஜய் வீட்டில் நடந்த வருமான வரிசோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ரஜினி மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது பாரபட்சமானது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'நெல் விளைந்த பிறகு விலை இல்லாமல் இருக்கிறது. விளைந்த நெல்லை வாங்க ஆள் இல்லை. நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல்லை விற்பனை செய்ய அரசு தலையிட்டு முறைப்படுத்தி வேண்டும்.
நடிகர் விஜய்யின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது அதை நிறுத்தி விட்டு வருமான வரி சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள், போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். மத்திய அரசு அவர்களுக்கு எதிரான கருத்து கூறுபவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையும் பழிவாங்கும் நடவடிக்கை தான்.
ரஜினி பெரியார் குறித்து பேசினார், குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவான கருத்து கூறினார். அதன்பிறகு அவர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இது மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு சொல்ல மறுக்கிறது, இங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை பிரதமர் இந்தியா வருகிறார். அங்கு முழுக்க முழுக்க தமிழர் விரோத ஆட்சி தான் நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி யில் முறைகேடு பகிரங்கமாக நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்' என்றார்