தி.மு.க செய்த தவறை அதிமுக செய்யக்கூடாது எச்சரிக்கும் ராமதாஸ்

கடலூரில் பெட்ரோலிய ஆலை நிறுவுவது தொடர்பான விவகாரத்தில்  தி.மு.க செய்த தவறை அதிமுக செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: கடலூரில் பெட்ரோலிய ஆலை நிறுவுவது தொடர்பான விவகாரத்தில்  தி.மு.க செய்த தவறை அதிமுக செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடலூர் மாவட்டத்தில் ரூ.50,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு  அமெரிக்காவைச் சேர்ந்த ஹால்தியா நிறுவனம் முன்வந்திருப்பதாகவும், அதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆலை அமைவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் ஆகும்.

முதலீடுகள் என்பதற்காக, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய  தொழில்திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத திட்டம் தான்.

கடலூர் மாவட்டத்தில் ஹால்டியா நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்தால் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும்; சுமார் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நன்மைகளை விட பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும்.

முந்தைய திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழிக்கும் வகையில் இதேபோன்ற  பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை  நாகார்ஜுனா நிறுவனத்தின் மூலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசின் வளங்களை தாரை வார்த்து 2008-ஆம் ஆண்டில்   அந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஜெர்மனியில் 1970-ஆம் ஆண்டுகளில் மூடப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட பழைய எந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்த ஆலை,   சுத்திகரிப்பை தொடங்குவதற்கு முன்பே தானே புயலில் சிக்கி சேதமடைந்ததால் கடலூர் மாவட்டம்   தப்பியது.

அப்போது தப்பித்த கடலூர் மாவட்டத்திற்கு ஹால்தியா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மூலம் மிகப்பெரிய ஆபத்தையும், சீரழிவையும் கொண்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல. காவிரி டெல்டாவின் கடைமடையான கடலூர் மாவட்டம் முப்போகம் விளையும் பூமியாகும். அந்த மண் தான் அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவையும் வழங்குகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதால் அம்மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கும், உழவுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டனவோ, அதைவிட மோசமான பாதிப்புகள் ஹால்தியா ஆலை வந்தால்  கடலூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

2008&ஆம் ஆண்டில் நாகார்ஜுனா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை என்ற சீரழிவை கடலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் அப்போதைய திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறை, ஹால்தியா ஆலையை கொண்டு வருவதன் மூலம் அதிமுக அரசும் செய்யக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் ஹால்தியா ஆலை மட்டுமல்ல. வளமான நிலத்தை நச்சு பூமியாக்கும் எந்த ஒரு பெட்ரோக் கெமிக்கல் திட்டத்தையும், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com