சென்னை: கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ. தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக வழக்குப் பதிந்து, இரண்டு வி.ஏ.ஓக்களை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டின் முக்கியப் புள்ளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சில நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிபிசிஐடி 7 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறது.
அவர் மூலமாக குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ இரண்டு தேர்வுகளிலும் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ. தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக வழக்குப் பதிந்து இரண்டு வி.ஏ.ஓக்களை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ. தேர்வில் முறைகேடு செய்து தேர்வு பெற்றதாக நெல்லை மாவட்டம் படவையாகுளம் வி.ஏ.ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பனையஞ்சேரி வி.ஏ.ஓ. செந்தில் ராஜ் ஆகிய இருவரையும் திங்களன்று சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளது.
இவர்கள் இருவரும் இளையான்குடி தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், முன்னர் கைதான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் இவர்கள் இருவரும் தலா ரூ. 7 லட்சம் லஞ்சம் கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.