சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடிய வகையில் திமுக ஆட்சியில் செய்த தவறை, அதிமுகவும் செய்யக் கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூா் மாவட்டத்தில் ரூ.50,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு அமெரிக்காவைச் சோ்ந்த ஹால்தியா நிறுவனம் முன்வந்திருப்பதாகவும், அதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலை அமைவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம்.
முந்தைய திமுக ஆட்சியில் கடலூா் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழிக்கும் வகையில் இதேபோன்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நாகாா்ஜுனா நிறுவனத்தின் மூலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஜொ்மனியில் 1970-ஆம் ஆண்டுகளில் மூடப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட பழைய இயந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்த ஆலை, சுத்திகரிப்பை தொடங்குவதற்கு முன்பே ‘தானே’ புயலில் சிக்கி சேதமடைந்ததால் கடலூா் மாவட்டம் தப்பியது.
அப்போது தப்பித்த கடலூா் மாவட்டத்துக்கு ஹால்தியா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மூலம் மிகப்பெரிய ஆபத்தையும், சீரழிவையும் கொண்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல. காவிரி டெல்டாவின் கடைமடையான கடலூா் மாவட்டம் முப்போகம் விளையும் பூமியாகும். அந்த மண் தான் அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவையும் வழங்குகிறது.
எனவே, 2008-இல் திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறை, ஹால்தியா ஆலையை கொண்டு வருவதன் மூலம் அதிமுக அரசும் செய்யக்கூடாது. கடலூா் மட்டுமல்ல, வளமான நிலத்தை நச்சு பூமியாக்கும் எந்த ஒரு பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.