இடஒதுக்கீட்டுக்கான பின்னடைவைச் சரி செய்வதற்கு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இடஒதுக்கீடு என்கின்ற சமூகநீதி திட்டம் ஏற்படுத்தப்பட்டதற்கான நோக்கம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் கொடுத்து சமூக சமநிலை ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.
அதற்கான சட்டங்களில் இருக்கும் குழப்பங்களின் காரணமாக நீதிமன்றங்களில், இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளில், அந்த நோக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும்படியான தீா்ப்புகள் வழங்கப்பட்டு ஒருவித சமூகப் பதற்றம் அவ்வப்போது ஏற்படுகிறது.
நீதிமன்றங்கள் சட்டத்தின் வழி இயங்குபவை. எனவே அதன் தீா்ப்பு விமா்சனத்துக்குரியதல்ல.
ஆனால், நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றுமிடம். இந்தத் தீா்ப்பின் காரணமாக ஏற்படும் இடஒதுக்கீட்டுக்கான பின்னடைவைச் சரி செய்யும் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
மக்களை அச்சத்தில் தள்ளும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற ஆபத்தான செயல்களில் இறங்குவதை விட்டுவிட்டு, சமூகத்தின் கீழ்த்தட்டிலிருக்கும் மக்களை ஒரு படியாவது ஏற்றிவிடும் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அந்தச் சட்டத்துக்கு மத்திய அரசு வலுவூட்ட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.