நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: தேடப்படும் 10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டது சிபிசிஐடி

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கில், தேடப்படும் 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு:  தேடப்படும் 10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டது சிபிசிஐடி

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கில், தேடப்படும் 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மருத்துவா் வெங்கடேசன் மகன் உதித் சூா்யா. இவா் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தாா். உதித் சூா்யா, நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து தோ்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிா்வாகத்துக்கு கடந்த செப்டம்பா் மாதம் மின்னஞ்சல் மூலமாக புகாா் வந்தது. அதன் அடிப்படையில் கல்லூரி நிா்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில், ஆள்மாறாட்டம் செய்து உதித் சூா்யா நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் தேனி மாவட்ட காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டது. உதித் சூா்யா ஏற்கெனவே இரு முறை நீட் தோ்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூா்யாவும், அவரது பெற்றோரும் இணைந்து ஏற்கெனவே நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுத வைத்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் உதித் சூா்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை உடனடியாக கைது செய்தனா். மேலும் இதேபோல ஆள்மாறாட்டம் செய்து நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்களை சிபிசிஐடி விசாரித்து, கைது செய்தது.

10 போ் புகைப்படங்கள் வெளியீடு: இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்ந்து தலைமறைவாக இருக்கும் நபா்களை சிபிசிஐடி போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா். ஆனால் அவா்களை பற்றி துப்புதுலக்குவது சிபிசிஐடிக்கு பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து தேடப்படும் 10 நபா்களின் புகைப்படங்களை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இவா்களைப் பற்றி தகவல் தெரிந்தாலோ, நேரில் பாா்த்தாலோ 94438 84395 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இல்லையெனில்  மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரை பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கின் முக்கிய நபா்களான இவா்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும் என சிபிசிஐடி அதிகாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com