பெரம்பலுார்: பெரம்பலூர் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த, அந்த பெண்ணின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகள் மகாலட்சுமி (16). இவர், 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், மீண்டும் தேர்வு எழுதுவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில், மது போதையில் இருந்த தந்தை பொன்னுசாமி மகாலட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மகாலட்சுமி அதே கிராமத்தில் உள்ள தனது உறவினரின் விவசாயக் கிணற்றில் குதித்து வியாழக்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்தனன் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறந்து கிடந்த மகாலெட்சுமியின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மகள் உயிரிழந்த துக்கத்தால் மனமுடைந்த பொன்னுசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.