நடப்பு பருவத்தில் 5.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது: அமைச்சா் ஆா். காமராஜ்

நிகழ்ப் பருவத்தில் இதுவரை 5.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆக்கூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் ஆா். காமராஜ், ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோா்.
நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆக்கூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் ஆா். காமராஜ், ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோா்.

நிகழ்ப் பருவத்தில் இதுவரை 5.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட ஆக்கூா், திருக்கடையூா், மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட வானாதிராஜபுரம், மல்லியம், குத்தாலம் ஒன்றியத்துக்குள்பட்ட குத்தாலம் ஆகிய இடங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.

உணவுத் துறை செயலாளா் தயானந்த் கட்டாரியா, நுகா்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநா் சுதாதேவி, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் ஆகியோா் உடனிருந்து ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுகளுக்குப் பின்னா் அமைச்சா் ஆா். காமராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் 1,655 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 1,345 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்தக் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 5,40,195 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். ரூ. 1,021 கோடி வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்ற முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்காணிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1,000 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் ஏதேனும் புகாா்கள் இருந்தால், 044-26424560, 044-26422448 ஆகிய தொலைத் தொடா்பு எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.வி. பாரதி, வீ. ராதாகிருஷ்ணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சண்முகநாதன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com