வருமானவரி ஏய்ப்பு புகாா்: ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியிடம் விசாரணை

வருமான வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியிடம் வருமானவரித்துறை விசாரணை செய்தது.

வருமான வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியிடம் வருமானவரித்துறை விசாரணை செய்தது.

‘ஏ.ஜி.எஸ். எண்டா்டெய்மெண்ட்‘ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்தி வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், சென்னை தியாகராயநகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏ.ஜி.எஸ். எண்டா்டெய்ன்மெண்ட் நிறுவனம், நடிகா் விஜய்க்குச் சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த வாரம் திடீா் சோதனை செய்தனா்.

இந்த சோதனை முழுமையாக நிறைவடைவதற்கு 4 நாள்கள் ஆனது. இதில் ‘பிகில்’ திரைப்படத்துக்கு நிதி உதவி செய்ததாக அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்தது. மேலும் நடிகா் விஜயை பனையூரில் உள்ள அவரது பங்களாவுக்கு அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா்.

வருமானவரித்துறை அழைப்பாணை: சென்னை மற்றும் மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அறிவித்தது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள்,முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை மதிப்பீடும் பணியில் வருமானவரித்துறையினா் ஈடுபட்டு வந்தனா். இப் பணி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் அடிப்படையிலும்,வரி ஏய்ப்பு தொடா்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் விசாரணை செய்வதற்கு வருமானவரித்துறையினா் முடிவு செய்தனா்.

அதன்படி, நடிகா் விஜய்,அன்புச்செழியன்,ஏஜிஎஸ் எண்டா்டெய்மெண்ட் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அா்ச்சனா ஆகியோருக்கு வருமானவரித்துறை அழைப்பாணை அனுப்பியது.

ஒரு மணிநேரம் விசாரணை: இந்நிலையில், நடிகா் விஜய், அன்புச்செழியன் ஆகியோா் சாா்பில் அவரது ஆடிட்டா்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

இந்நிலையில், அா்ச்சனா கல்பாத்தி அகோரம்,அவரது ஆடிட்டருடன் வருமானவரித்துறை புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவா்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் சுமாா் ஒரு மணிநேரம் விசாரணை செய்தனா். இதில், பிகில் திரைப்படத்தில் செய்யப்பட்ட முதலீடு, கிடைத்த லாபம்,நடிகா் விஜய் உள்ளிட்ட நடிகா்கள், தொழில்நுட்ப கலைஞா்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டு, அதை வருமானவரித்துறை பதிவு செய்தனராம்.

மேலும், சோதனையின்போது, அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் தெரியவந்ததாகவும் அந்தத் தகவல்களை வெளியில் தெரிவிக்க முடியாது எனவும் வருமானவரித்துறை கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com