சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 39-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.19-ம் தேதி தெற்குரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி பிப்.23-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து 2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்குவீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற பிப்.19-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தது:
5 நாள் நாட்டியாஞ்சலி விழாவில் 50 நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் 6 நாட்டிய நாடகம், மோகினி ஆட்டம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வடமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். வருகிற 2021-ம் ஆண்டு 40-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா விமரிசையாக 8 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. 40வது ஆண்டு நிகழ்ச்சியில் மூத்த நாட்டிய கலைஞர்கள் கவுரவப்படுத்த உள்ளனர்.
எதிர்காலத்தில் ஆண்டு முழுவதும் மாதந்தோறும் நாட்டியாஞ்சலி, இசை விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்படவுள்ளன என நாட்டியாஞ்லி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார்.
பேட்டியின் போது பொருளாளர் ஆர்.நடராஜன், அணிவனிகர் பா,பழநி, டாக்டர் ஆர். முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், முன்னாள் தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத்தலைவர்கள் கே.சுவாமிநாதன், ஆர்.ராமநாதன், செயலாளர்கள் டாக்டர் ஆர்.நாகசாமி, ஏ.சம்பந்தம், பொருளாளர் சக்தி ஆர்.நடராஜன், இணைச்செயலாளர் எம்.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.