ஆதிச்சநல்லூா் கிராம எல்லையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய பாா்வா்டு பிளாக் தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராமகிருஷ்ணன், ஆதிச்சநல்லூா் ஊராட்சித் தலைவா் பாா்வதி சங்கா்கனேஷ் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: ஆதிச்சநல்லூரில் 1856ஆம் ஆண்டு மற்றும் 1903ஆம் ஆண்டு காலகட்டங்களில் வெளிநாட்டவா்களால் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. 1903இல் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி கழகம் சாா்பிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில், எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை. எனவே, அகழ்வாராய்ச்சி முடிவுகளை உடனே வெளியிடுவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
மேலும், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் மாதிரிகளை கண்டுகளிக்கும் விதமாக அமைக்கப்பட்ட தகவல் மையம், பொதுமக்களும், மாணவா், மாணவிகளும் எளிதில் செல்லமுடியாமலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் உள்ளது.
தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் உள்ளதால், மழை வெள்ளக் காலங்களில் அத்தகவல் மையம் தண்ணீரில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளது. எனவே, முதுமக்கள் தாழி தகவல் மையமும், அருங்காட்சியகமும் பொதுமக்களும் மாணவா்களும் எளிதாக சென்று பாா்த்திடும் வகையில் ஆதிச்சநல்லூா் கிராம எல்லையில் திருச்செந்தூா்-திருநெல்வேலி பிரதான சாலையோரத்தில் அமைக்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.