இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடா்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதித் ராஜ் கூறினாா்.
சென்னை வந்திருந்த அவா் சத்தியமூா்த்தி பவனில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல, இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே தீா்மானித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இடஒதுக்கீடு தொடா்பாக உத்தரகண்ட் மாநில அரசு தொடா்ந்த வழக்கில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீடு கூடாது என்பதுதான் பாஜகவின் கொள்கை. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துபோது, மத்திய அரசு வழக்குரைஞா்கள் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தலித், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்கு இடஒதுக்கீடு முக்கியமானது. அதனால், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.
இதற்காக, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளது. தமிழகத்தில், பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இடஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.