மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அடுத்துள்ள வலைச்சேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பி.சரவணன். விவசாயியான இவர், காதலர் தினத்திற்கு எதிராக திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில்நிலையம், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் விழிப்புணர்பு பதாகை ஏந்தி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பழந்தமிழர்கள் பின்பற்றி வந்த பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்தை உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பின்பற்றி வருகின்றனர். ஆனால், இன்றைய இளைய சமுதாயம் காதலர் தினம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி, எல்லை மீறி பழகுவதை கெளரவமாக கருதும் சூழல் உள்ளது.
நமது முன்னோர்கள் பரிசுப் பொருள்களை மட்டுமே கொடுத்து அன்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது காதலனை நம்பி கற்பை பரிகொடுத்துவிட்டு, காவல் நிலையத்திலும், காதலனின் வீட்டு முன்பும் போராடக் கூடிய சூழல் உள்ளது. எனவே, இதுகுறித்து இளைய சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2007 முதல் ஒரு நகரத்தை தேர்வு செய்து காதலர் தினத்தன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் குமரன் பூங்கா பகுதிகளுக்கு பதாகைகளுடன் சரவணன் சென்றார். காதலர் தினத்திற்கு எதிரான பதாகைகளுடன் அவரை பார்த்த பல காதலர்கள், அச்சத்திலும், அதிர்ச்சியிலும் தனித் தனியாக பிரிந்து செல்லத் தொடங்கினர். ஆனாலும், சில காதலர்களை அழைத்து பேசிய சரவணன், நாகரிகமாக பழகி, பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.