திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற 4 காளைகள் கிணற்றில் விழுந்ததில் ஒரு காளை உயிரிழந்ததை அடுத்து, ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கொசவப்பட்டி புனித அந்தோணியார் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடைத்துறை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்கு பின், வாடிவாசலுக்கு காளைகள் அனுமதிக்கப்பட்டன.
அதேபோல் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். இந்நிலையில் வாடிவாசல் பகுதியிலிருந்து வெளியேறிய 4 காளைகள் அந்த பகுதியில் இருந்த வெவ்வேறு கிணறுகளில் தவறி விழுந்தன. இதில், வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடிவீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட காளையின் சடலத்தை வாடிவாசல் மைதானத்திற்கு கொண்டு வந்த அதன் உரிமையாளர்கள், விழாக் குழுவினருடன் வாக்குவாதம் செய்தனர். இதனை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகை புகைப்படக்காரர்களை, கொசவப்பட்டியைச் சேர்ந்தவர்கள் படம் பிடிக்கவிடாமல் வெளியேற்றினர். இதனால், கொசவப்பட்டி கிராமத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உயிரிழந்த காளையின் உரிமையாளர் மற்றும் விழாக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.