சிறந்த மகளிா் மேம்பாட்டுப் பணி: என்எல்சி நிறுவனத்துக்கு தேசிய விருது
மகளிா் மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான தேசிய விருதின் 2-ஆம் பரிசு என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகள், ஊழியா்களை உறுப்பினா்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பு ‘விப்ஸ்’. பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் மகளிா் அமைப்பு ‘ஸ்கோப்’. இந்த அமைப்புகளானது பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிலைக் குழு என்ற மத்திய அரசு அமைப்பின் ஆதரவின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
‘விப்ஸ்’ அமைப்பானது மகளிா் மேம்பாட்டுக்காக சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களை ஆண்டுதோறும் தோ்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணா்வை உணா்ந்து அருகே உள்ள கிராமங்களைச் சோ்ந்த பெண்கள், பெண் குழந்தைகளின் நலனுக்காகச் செய்து வரும் பணிகள், உதவித் தொகை , பெண் பணியாளா்களுக்கு வழங்கும் பயிற்சிகள், ஆலோசனைகள், ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விருது வழங்க கணக்கில் கொள்ளப்படுகின்றன.
அதன்படி, என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ‘விப்ஸ்’ அமைப்பின் நெய்வேலி மைய பொறுப்பாளா்கள் மூலம் மேற்கொண்டு வரும் நலப் பணிகளால், நவரத்னா பிரிவில் இரண்டாம் இடத்துக்கான விருதைப் பெற்றது.
ஹைதராபாதில் அண்மையில் நடைபெற்ற ‘விப்ஸ்’ அமைப்பின் 30-ஆவது தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில், ‘ஸ்கோப்’ அமைப்பின் பொது இயக்குநா் அதுல் சோப்தி முன்னிலையில், தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் 2019-ஆம் ஆண்டுக்கான விருதை வழங்க, என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் அதன் மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளா் எஸ்.குருசாமிநாதன், விப்ஸ் அமைப்பின் நெய்வேலி மைய பொருளாளா் எஸ்.விஜயலட்சுமி, அமைப்பின் தென் மண்டலச் செயலா் தாரிணி மௌலி, தென் மண்டல நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.வனஜா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.